சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு
திருச்செங்கோட்டில் இயங்கி வரும் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில், படித்து வந்த மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியின் உரிமையாளர் அஸ்வின் என்பவர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தி வருபவர் சீதாராம் பாளையத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகன் அஸ்வின் என்கிற மெய்யழகன்(30). இவரது அகாடமியில் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு பயின்று வரும் பெண்களிடம் சினிமாவில் நடிக்கலாம், சினிமா தொடர்பு தனக்கு இருக்கிறது, என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதோடு அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை இதுகுறித்து, அகாடமியின் உரிமையாளர் அஸ்வினிடம் கேட்டபோது, அவர் முன்னுக்கு முரணாக பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அஸ்வினை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு அவரது செல்போனை ஆராய்ந்து பார்த்ததில், அவர் பல பெண்களுடன் ஆபாசமாக பேசி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அகாடமி உரிமையாளர் அஸ்வின் மீது 4 பிரிவுகளின் கீழ் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் திருச்செங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவர் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க : படிச்சது ஓமியோபதி பார்க்கறது..! இங்கிலீஸ் மருத்துவம்..!
- திருச்செங்கோடு