நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ராமராஜ் தலைமை வகித்தார். உறுப்பினர் ரமோலா முன்னிலை வகித்தார். இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி வாக்களிப்போம் என்றும் மதம், இனம், ஜாதி, மொழி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு எந்தவித தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என்றும், சுதந்திரமான நியாயமான தேர்தல்கள் நடைபெற உறுதியாக இருப்போம் என்றும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 22 வழக்குகளில், தாக்கல் செய்தவர்களுக்கும் எதிர் தரப்பினர்களுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைக்கு, வரும் 30 ஆம் தேதி வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதைப் போலவே 2023 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்குகளில் சுமார் 60 வழக்குகளில், பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண அடுத்த மாதம் சமரசம் முகாம் நடைபெற உள்ளது என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சிவில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராஜவேலு, நுகர்வேர் பாதுகாப்பு சங்க செயலாளர் சுப்பராயன், தலைமை எழுத்தர் கணபதி மற்றும் திரளான வழக்கறிஞர்கள், பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : நாமக்கல்லில் போலீஸ் உடற்தகுதி பயிற்சி வகுப்பு..
- நாமக்கல்