...
April 20, 2024
#செய்திகள்

நிலங்களில் இருந்து மண் எடுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்களில் இருந்து மண் எடுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்களில் இருந்து மண் எடுத்து வந்து நூதனமான முறையில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி, அரூர், பரளி, லத்துவாடி, என்.புதுப்பட்டி பகுதிகளில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்க தமிழக தொழில் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் 450-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிப்காட் எதிர்ப்பு இயக்கம் மற்றும் விவசாய முன்னேற்றக்கழகம் சார்பில் இதுவரை 50க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பை புறக்கணிப்பதாக வீடுகளின் முன்பு நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தங்களது விவசாய நிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணை சட்டியில் நிரப்பி அதில் சூடம் ஏற்றி கையில் வைத்து கொண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நூதன முறையில் வளையப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், தமிழக அரசுக்கும் எதிராகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி இதுவரை 50 போராட்டங்களை நடத்தியும், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன்வராதது மிகுந்த வேதனையாக உள்ளது என தெரிவித்தனர்.

இதையும் படிங்க : வேளாண் விரிவாக்க அலுவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorBannerText_Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.