தை அமாவாசையை முன்னிட்டு மோகனூரில் முன்னோர்களுக்கு தர்பணம்
தை அமாவாசையை முன்னிட்டு மோகனூர் காவிரி ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயான புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூலோகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனேயே தங்கி இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாத அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். நம்முடைய வீட்டிற்கு வந்து தங்கி விட்டு செல்லும் விருந்தினர்களை வழியனுப்பி வைப்பது போல பித்ரு லோகம் செல்லும் முன்னோர்களை நாம் தை அமாவாசை நாளில் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்கும் நிகழ்வு தான் தை அமாவாசை.
நம்முடன் வாழும் நம் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்தவர்களுக்கும் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ கடற்கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட வேண்டும் அவசியம்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இந்த தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு தை அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதாக இந்துக்களால் நம்பப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றின் கரையில் ஏராளமானோர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
அதிகாலையிலே காவிரி ஆற்றில் புனித நீராடி, வேத விற்பன்னர்கள் மூலம் பலிகர்மம் பூஜை செய்தனர். வாழை இழையில் பச்சரிசி, பூ, தர்ப்பை, பச்சரிசி, எள் போன்றவை வைத்து பூஜை செய்து அதனை காவிரி ஆற்றில் கரைத்து புனித நீராடினர். இதில் நாமக்கல், மோகனூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் வழிபாடு நடத்தினர்.
- நாமக்கல்