மோகனூரின் முதல் பெண் இன்ஸ்பெக்டர்..!
மோகனூர் காவல்நிலையத்தின் முதல் பெண் ஆய்வாளராக சவிதா அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவல் நிலையம் கடந்த 1926 வருடம், ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. 1996-ம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து மோகனூர் காவல் நிலையம் பரமத்தி வேலூர் சரகத்திலிருந்து,நாமக்கல் காவல் சரகத்திற்கு மாற்றப்பட்டது.
அதை தொடர்ந்து இதுவரை 26 காவல் ஆய்வாளர்கள் மோகனூர் காவல் நிலையத்தில் பணியாற்றியுள்ளனர். இங்கு பணியாற்றிய காவல் ஆய்வாளர் தங்கவேல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து, மோகனூர் காவல்நிலையத்தின் 27-வது காவல் ஆய்வாளராக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்தில் இருந்து பணியாற்றிய சவிதா நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா வாழ்த்துக்களை தெரிவித்தார். அதேபோல் மோகனூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் சக காவலர்கள் ஆய்வாளர் சவிதா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதில் சுவராஸ்யம் என்னவென்றால், மோகனூர் காவல்நிலையத்தில் இதற்கு முன்னர் பணிபுரிந்த 26 ஆய்வாளர்களும் ஆண்கள். தற்போது சவிதா அவர்கள், பொறுப்பேற்றுள்ளதால் மோகனூர் காவல்நிலையத்தின் “முதல் பெண் இன்ஸ்பெக்டர்” என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பரமத்தி வேலூரில் வெல்லத்தில் கலப்படம் : 12 டன் சர்க்கரை பறிமுதல்
- நாமக்கல்