பூக்களை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி தர்ணாவில் ஈடுபட்ட பூ வியாபாரியால் பரபரப்பு
சேலம் மாநகர போக்குவரத்து போலீசார் ரூ.10,000 ஆன்லைன் அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த பூ வியாபாரி காரில் கொண்டு வந்த சாமந்தி பூக்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த சீத்தாராம் பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (35) அப்பகுதியில் பூ கடை நடத்தி வரும் இவர் இன்று தனக்கு சொந்தமான காரில் சேலம் மாவட்டம் ஓமலூர் சென்று சாமந்தி பூக்களை வாங்கி தனது காரில் ஏற்றி கொண்டு திரும்பியுள்ளார். சேலத்தில் அவரது வாகனத்தை மறித்த மாநகர போக்குவரத்து போலீசார் “சொந்த வாகனத்தில்” லோடு ஏற்றி செல்லக்கூடாது என்று கூறியதுடன் ரூ. 10,000 ஆன்லைன் அபராதம் விதித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்து தனது காரை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்ததுடன் அதில் இருந்த பூக்களை ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் கொட்டி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லிபாளையம் போலீசார் அவரை சமாதானம் படுத்த முற்பட்டனர். இருப்பினும் பூ வியாபாரி ராமன் போக்குவரத்து போலீசாரை கண்டித்து சாபம் விட்டார். பின்னர் போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : நாமக்கல்லில் பரபரப்பு, இனோவா காரில் வந்து 17 பவுன் நகை திருட்டு..!
- நாமக்கல்