ராசிபுரத்தில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் மராத்தான்
புற்றுநோய் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராசிபுரம் தனியார் கல்லூரி சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதியில் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் புற்றுநோய் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் மாரத்தான் போட்டியானது இன்று (24.12.2023) நடைபெற்றது.
இந்த போட்டியில் 5 கிலோமீட்டர்,10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. இதனை நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி காக்காவேரி, ஆத்தூர் சாலை, சிங்களாந்தபுரம், தொப்பப்பட்டி உள்ளிட்ட வழியாக சென்று இறுதியாக மீண்டும் கல்லூரி சென்றடைந்தனர். இரு பிரிவுகளிலும் சேலம்,கரூர்,திருச்சி,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தனியார் மற்றும் அரசு கல்லூரி,பள்ளி மாணவ மாணவிகள் என 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று புற்றுநோய் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போட்டியில் 10 கிலோ கிலோமீட்டர் போட்டியில் திருச்செங்கோடு தனியார்(KSR) கல்லூரியை சேர்ந்த வினித் என்ற மாணவரும், திருச்சியை சேர்ந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வினோதினி என்ற மாணவியும் முதல் பரிசை பெற்றனர். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாணவ மாணவிகள் மாரத்தான் போட்டியில் ஓடிச் சென்று இருந்த போது அதில் அகிலேஷ் என்ற சிறுவன் தனது அண்ணனை ஊக்குவிப்பதற்காக 5 கிலோமீட்டர் பிரிவில் தொடர்ந்து போட்டியில் ஓடிச் சென்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
இதையும் படிங்க: இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்
- இராசிபுரம்