திருச்செங்கோட்டில் அறிவுசார் மையம் : முதல்வர் துவக்கி வைத்தார்
திருச்செங்கோட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ 1 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அறிவுசார் மையம் மற்றும் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இன்று தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் ஒரு கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையத்தையும் , கொல்லப்பட்டி பகுதியில் ரூ 35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த அறிவு சார் மையத்தில் நீட் தேர்வு மற்றும் அரசு தேர்வாணைய தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 50 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்க கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் கல்வி சார்ந்த வேலை சார்ந்த தகவல்களைப் பெற பத்து கணினிகள் அதி வேக இணைய வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. குழுவாக அமர்ந்து படிக்கவும் வல்லுனர்களைக் கொண்டு வகுப்புகள் எடுக்கவும் வசதியாக தொடுதிரை வசதி கொண்ட பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மாணவ மாணவிகள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் திறந்து வைத்த பின்பு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர அமைப்பு குழு உறுப்பினர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் குத்து விளக்கேற்றி அறிவுசார் மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர் . இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க ; திருச்செங்கோட்டில் 30 வருட கால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு..! எம்.எல்.ஏ ஈஸ்வரன் சொன்ன ஹேப்பி நியூஸ்..!
- திருச்செங்கோடு