முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்..!
நாமக்கல் மண்டலத்தில், தொடர்ந்து உயர்ந்து வந்த முட்டை விலை 20 பைசா சரிவடைந்து ஒரு முட்டையின் விலை ரூ. 5.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், முட்டைக்கான கொள்முதல் விலையை நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் “தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு” தினசரி நிர்ணயம் செய்து வருகிறது.
அதன்படி இன்று நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகளில் 20 காசுகள் குறைந்து 5 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக விலை மாறாமல் ஒரே விலையில் நீடித்து வந்த முட்டை விலை இன்று 20 காசுகள் குறைந்துள்ளதால் முட்டை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- நாமக்கல்