தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த கொ.ம.தே.க சார்பில் குழு அமைப்பு
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை தற்போது துவக்கியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக இயங்கி வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையம், தேர்தல் சம்மந்தமான அறிவிப்பு வெளியான பின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அதன்பிறகு அரசியல் கட்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்பதால் தற்போது தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மாநாடுகள் நடத்தி தங்களின் சாதனைகளை பட்டியலிட்டு வெளியிட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் கொமதேக ;
தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி துவக்கப்பட்டு, ஏற்கனவே திமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தி, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற, நாடுளுமன்ற தேர்தலில், நாமக்கல் தொகுதியில் கொ.ம.தே.க. சார்பில் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு சின்ராஜ் வெற்றிபெற்று தற்போது எம்.பியாக உள்ளார். அதேபோல், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் போட்டியிட்டு வெற்றிபெற்ற தற்போது எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வருகிறார். தற்போது பல்வேறு அரசியல் கட்சிகளும், தங்களின் கூட்டணி கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு ;
இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக தொகுதி பங்கீடு குறித்து திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நிர்வாகிகளின் பட்டியலை அக்கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கொமதேக துணை பொது செயலாளர்கள் சக்தி நடராஜன், நாமக்கல் எம்.பி.சின்ராஜ், நித்தியானந்தம், இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, கொள்கை பரப்பு செயலாளர் அசோகன் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார். இந்த குழு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது குறித்து திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
- நாமக்கல்