நாமக்கல் உழவர் சந்தையில் 34.5 டன் காய்கறிகள் விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 34.5 டன் காய்கறிகள், ரூ. 12.77 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் விற்பனையானது.
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
தற்போது மார்கழி மாதம், சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் விழாக்காலம் துவங்கியதால், பலர் வீடுகளில் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறி உள்ளனர். இதனால் வழக்கத்தை விட இன்று உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது. மொத்தம் 205 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.
மொத்தம் 27,395 கிலோ காய்கறிகள் மற்றும் 5,415 கிலோ பழங்கள், 45 கிலோ பூக்கள் என மொத்தம் 34,515 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இன்று தக்காளி ஒரு கிலோ ரூ. 32, கத்தரி ரூ. 80, வெண்டை ரூ. 56, புடலங்காய் ரூ. 36, பீர்க்கங்காய் ரூ. 60, பாகற்காய் ரூ. 60, அவரை ரூ.80, சின்ன வெங்காயம் ரூ. 35, பெரிய வெங்காயம் ரூ. 34 என்ற விலையில் விற்பனையானது.
மொத்தம் 6,900 பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் சென்றனர். இன்று ஒரே நாளில் விற்பனையான காய்கறி மற்றும் பழங்களின் மொத்த மதிப்பு ரூ. 12 லட்சத்து, 77 ஆயிரத்து 215 ஆகும் என உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : (14.01.24) நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்
- நாமக்கல்