சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண் கைது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கந்து வட்டி கடனை அடைக்க தன்னுடன் பணிபுரிந்த சத்துணவு சமையல் பணியாளரை கொலை செய்த பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள புத்தர் பகுதியில் செயல்படும் நகராட்சி துவக்க பள்ளியில், தமிழக அரசின் புதிய திட்டமான காலை சிற்றுண்டி தயாரிக்கும் உணவகத்தில், தெற்கு காலனி பகுதியைச் சேர்ந்த கௌரிகாஞ்சனா என்ற பெண்மணியும், தம்மன்ன செட்டியார் வீதி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரி என்ற பெண்ணும் சமையலராக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இருவரையும் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் குமாரபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விஏஓவிடம் சரண் :
இந்நிலையில், கெளரிகாஞ்சனா மட்டும் குமாரபாளையம் விஏஓ முருகனிடம் சரணடைந்தார். பின்னர் அவரை குமாரபாளையம் காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்:
அதில் கௌரி காஞ்சனா என்ற சமையலருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அவரின் கணவர் குடி போதைக்கு அடிமையானவர் என்பதால், தனது குடும்ப செலவிற்காக பலரிடமும் கடன் வாங்கி உள்ளார். இதனால் அவரின் கடன் சுமை சுமார் 10 லட்ச ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இவர் ஒருவரது வருமானத்தில் தனது குழந்தைகளை பார்த்துக்கொண்டு, கடனையும் கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், கடன்காரர்கள் தங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
திட்டம் தீட்டி கொலை செய்தது அம்பலம்:
தன்னுடன் பணிபுரிந்து வந்த மற்றொரு சமையலாளர் மாதேஸ்வரி கழுத்தில் நகைகள் அணிந்து இருந்ததால், அவரிடமிருந்து நகைகளை பறித்து கடனை கட்டிவிடலாம் என்று நினைத்து சமையல் கூடத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மகேஸ்வரியை கீழே தள்ளி கழுத்து நெரித்து கொலை செய்தார் கெளரிகாஞ்சனா.
அவரின் சடலத்தை ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் பகுதியில் உள்ள வாய்க்காலில் வீசிவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துச் சென்று குமாரபாளையத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் விற்பனை செய்து அந்த பணத்தை கடன் கொடுத்த நபர்களுக்கு பகிர்ந்து அளித்தார். பின்னர் போலீசார் தன்னை நெருங்கி விடுவார்கள் என்பதால் தனது இரு மகள்கள் மற்றும் மகனையும் இரவோடு இரவாக அழைத்து கொண்டு தலைமறைவாகிவிட்டார். போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த கெளரி காஞ்சனா விஏஓவிடம் சரண் அடைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை வழக்காக மாற்றம்:
மாதேஸ்வரி மாயமான நிலையில் “பெண் மாயம்” என வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து கெளரி காஞ்சனாவின் ஒப்புதல் வாக்குமூலத்தையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் நேற்று காலிங்கராயன் வாய்க்காலில் மாதேஸ்வரியின் உடலை தேடி பார்த்த போது அவரது உடல் கிடைக்கவில்லை. இதனையடுத்து மாதேஸ்வரியின் உடலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வேறு யாருக்காவது தொடர்பா..?
மாதேஸ்வரியை கெளரிகாஞ்சனா மட்டுமே கொலை செய்து சடலத்தை காலிங்கராயன் வாய்க்காலில் வீசி சென்றாரா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது கைது செய்யப்பட்ட கெளரி காஞ்சனாவை குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் .
இதையும் படிங்க : நாமக்கல் ஆயுதப்படை பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை
- குமாரபாளையம்