60 கிலோ மிளகாய் கொண்டு சிறப்பு யாகம், எங்கே தெரியுமா..?
நாமக்கல் அடுத்துள்ள அணியபுரத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவர் திருக்கோவிலில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு தை அமாவாசையை முன்னிட்டு 60 கிலோ மிளகாய் கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
பிரத்யங்கிரா தேவி உருவான வரலாறு;
பிரகலாதனுக்காக, மகாவிஷ்ணு மிகவும் உக்கிரமாக நரசிம்மராக வெளிப்பட்டு இரணியனை வதம் செய்தார். அதன் பின்னரும் அவரது உக்கிரம் குறையாமல் அந்த கோபத்தில் இருந்து வெளிவர முடியாமல் இருந்தார். அப்போது தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிடுகிறார்கள்.
சிவபெருமான் பாதி சிங்கமாகவும் பாதி பறவையாகவும் இணைந்த சரபேஸ்வரராக மாறுகிறார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணிலிருந்து அம்பிகை பிரத்தியங்கிரா தேவியாக ஆயிரம் சிங்க முகங்கள்,இரண்டாயிரம் கைகளுடன் வெளிப்பட்டாள்.
பிரத்தியங்கிரா தேவியும், அம்பிகை சூலினியும் சரபேஸ்வரரின் இரண்டு இறக்கைகளில் ஐக்கியமாகிக் கொள்கிறார்கள்.பின்னர் சரபேஸ்வரர், தனது இறக்கைகளால் அன்புடன் அரவணைத்து கொள்கிறார். அச்சமயம் நரசிம்மரின் கோபம் தணிகிறது. பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவள் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறாள். பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறாள்.
மிளகாய் வற்றல் யாகம் (நிகும்பலா ஹோமம்) ;
அமாவாசை நாளில் பிரத்யங்கிரா தேவிக்கும் மிளகாய் வற்றலைக் கொண்டு செய்யப்படும் யாகத்திற்கு நிகும்பலா யாகம் என்று பெயர். பிரத்யங்கிரா தேவிக்காக அமைக்கப்பட்டுள்ள பல கோவில்களிலும் இந்த மிளகாய் யாகம் நடத்தப்படுகிறது. பல கோவில்களில் ஒவ்வொரு அமாவாசை நாளிலும், சில கோவில்களில் அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி ஆகிய நாட்களில் இந்த நிகும்பலா யாகம் நடத்தப்படுகிறது. யாகத்தீயில் இடப்படும் மிளகாய் காட்டம் ஏற்படுத்துவதில்லை என்பது சிறப்பு.
யாகத்தின் பயன்;
நிகும்பலா ஹோமம், மிக சக்தி வாய்ந்த ஹோமம். இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பிரத்தியங்கிரா தேவியை மனதார வேண்டிக்கொண்டால், எதிர்ப்புகள் விலகும். எதிரிகள் வலுவிழப்பார்கள். எடுத்த காரியம் அனைத்தையும் நிறைவேற்றித் தந்தருளுவாள் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி. அமாவாசையில் சக்தியை வழிபடுவதே புண்ணியம். அதிலும் உக்கிர தேவதையாகத் திகழும் பிரத்தியங்கிரா தேவியை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் வாழ்வில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் கொடுக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
தை அம்மாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் யாகம் :
இந்நிலையில் இன்று(09.02.24) தை அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் அடுத்துள்ள அணியாபுரத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவர் திருக்கோவிலில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் கொண்டு வந்த சுமார் 60 கிலோ மிளகாயை கொண்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு பூஜை பொருட்கள் யாகத்தில் போட்டு பூஜை நடத்தப்பட்டது. அதன்பின் பிரத்யங்கிரா தேவிக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம், சந்தனம், பன்னீர், இளநீர், கரும்புச்சாறு ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க : தை அமாவாசையை முன்னிட்டு மோகனூரில் முன்னோர்களுக்கு தர்பணம்..!
- நாமக்கல்