திருச்செங்கோட்டில் இளவட்ட கல் தூக்கும் போட்டி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரம்பரிய தமிழர்களின் விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி நெசவாளர் காலனி பகுதியில் 2-வது ஆண்டாக நடைபெற்றது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தமிழரின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் .
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட, நெசவாளர் காலனி பகுதியில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி இரண்டாவது ஆண்டாக நடைபெற்றது. சங்க காலம் தொட்டு இளவட்ட கல்லை தூக்குபவர்களுக்கு மட்டுமே திருமணத்திற்கு பெண் கொடுக்கும் நிலை இருந்து வந்த நிலையில் படிப்படியாக இந்த கலை அழிந்து வருகிறது,
இருப்பினும், இன்னும் பல்வேறு கிராமங்களில் மட்டுமே ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வரும் நிலையில், நகரப் பகுதியில் குறிப்பாக திருச்செங்கோடு நகராட்சி ஐந்தாவது வார்டு நெசவாளர் காலனி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு, பொங்கல் திருவிழாவை ஒட்டி நடந்த போட்டிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் சுதாகர் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 86 கிலோ எடை கொண்ட இந்த கல்லை தோளுக்கு மேல் தூக்கி பின்பக்கமாக போடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் ஒரு சில இளைஞர்களே வெற்றி பெற்றனர். அதிலும் அடுத்தடுத்து அதிகப்படியான எண்ணிக்கையில் தூக்குபவர்களுக்கு பரிசு என அறிவிக்கப்பட்டிருந்ததால் மாறி மாறி தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எல்.இ.டி டிவி பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ; நாமக்கல் ரயில் நிலையம் வந்த 2,600 டன் சோயா
- திருச்செங்கோடு