மார்ச் 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம்.. மாவட்டத்தில் 17,411 மாணவர்கள் தயார்
மாநிலத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, வரும் மார்ச், 1ல் துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தேர்வை, 17,411 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை மூலம் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, வரும் மார்ச் 1-ல் துவங்கி, 22 வரை நடைபெற உள்ளது. அதேபோல், பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, 25ல் முடிகிறது. நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி என, மொத்தம், 197 பள்ளிகளை சேர்ந்த, 8,479 மாணவர்கள், 8,932 மாணவியர் என, மொத்தம், 17,411 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும், பிளஸ் 1 தேர்வில், 9,151 மாணவர்கள், 9,304 மாணவியர் என, மொத்தம், 18,455 பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்காக, 86 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
‘டாப் சீட்’ அனுப்பும் பணி துவக்கம்;
இந்நிலையில், தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு, ‘டாப் சீட்’ எனப்படும் ‘முகப்புத்தாள்’, விடைத்தாள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர், தங்களுக்கு தேவையான டாப் சீட், விடைத்தாள்களை வாங்கி சென்றனர். தொடர்ந்து, டாப் சீட் மற்றும் விடைத்தாள் வைத்து தைத்து, தேர்வு நேரங்களில் மாணவ, மாணவியருக்கு வழங்குவர்.மேலும், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு, வரும், 12ல் துவங்குகிறது. இந்த தேர்வுகள், குறிப்பிட்ட நாட்களில் முடிக்கவும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகளை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் முடிக்கி விட்டுள்ளனர்.
இதையும் படிங்க : சாலப்பாளையத்தில் வருகின்ற 18-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி
- நாமக்கல்