இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்
குமாரபாளையத்தில் கணவன் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடனேயே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதிகள் நாராயணன் (68) மற்றும் ராஜேஸ்வரி (67) ஆவர். இவர்கள் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் இல்லை. இதனால் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், நாராயணன் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாக இருந்தவரை, ராஜேஸ்வரி நன்கு கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (23.12.2023) உடல்நிலை மிகவும் மோசமடைந்து எதிர்பாராத விதமாக நாராயணன் உயிரிழந்தார் . இந்த துக்கம் தாங்காமல் அதிர்ச்சியில் இருந்த அவரது மனைவி ராஜேஷ்வரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வந்த நிலையில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் இறுதி சடங்குகளை அவரது உறவினர்கள் மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: (25.12.23) நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள்
- திருச்செங்கோடு