ராசிபுரத்தில் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தி கேட்டு தேமுதிக நிர்வாகி மரணம்
தேமுதிக தலைவரும்,நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்த செய்தியை தாங்க முடியாமல் ராசிபுரம் அருகே கட்சி நிர்வாகி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமான அவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்தினர்.
திருவுருவ படத்திற்கு மரியாதை
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பகுதியில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் சார்பில் பேருந்து நிலையத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கட்சி நிர்வாகிகள் பேனர் வைத்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள் அனைவரும் அங்கு சென்று விஜய்காந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதில், தேமுதிக 15வது வார்டு துணை செயலாளரும், ரசிகருமான மோகன் (52) என்பவர் அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மாரடைப்பால் உயிரிழப்பு
பின்னர் மோகன் வீட்டிற்கு சென்ற நிலையில், அரை மணி நேரத்தில் மோகன் மாரடைப்பால் மயங்கி விழுந்தார். பின்னர் குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் நாமகிரிப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர் மோகன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததை அடுத்த அவரது உடல், வீட்டிற்கு கொண்டு சென்றனர். பின்னர் உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரது உடலை நாமகிரிப்பேட்டை மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்த செய்தியை தாங்க முடியாமல் கட்சி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் 4 ஆயிரம் மனுக்களுக்கு நடவடிக்கை
- இராசிபுரம்