4,323 வேளாண் விரிவாக்க அலுவலருக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் ..!
800 பண்ணை குடும்பங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் என்ற அடிப்படையில், 4,323 வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என, நாமக்கல்லில் நடைபெற்ற உதவி வேளாண் அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அருள் தெரிவித்தார்.
தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர்கள் சங்கத்தின், மாநில செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், மாநில தலைவர் அருள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சேகர் வரவேற்றார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில தலைவர் அருள், தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள், விவசாயிகளின் எதிர்பார்ப்புமான மீண்டும் பயிற்சி வழி தொடர்பு திட்டம் போல்,3 முதல், 4 வருவாய் கிராமங்களுக்கு, ஒரு விவசாய அலுவலர் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2023, பட்ஜெட்டில், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர், அமைச்சர், அரசுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநிலம் முழுவதும், வேளாண் ஆணையர் அறிவுறுத்தல்படி, 4,323 தலைமையிட தொகுதிகள் பிரிக்கப்பட்டு, தொகுதிக்கு குறைந்த பட்சம், 800 ஹெக்டர், அதிக பட்சம், 1,127 ஹெக்டர் அல்லது 3 முதல், 4 வருவாய் கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் அல்லது, 800 பண்ணை குடும்பங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலகர் என்ற அடிப்படையில், 4,323 வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். வேளாண் விரிவாக்க அலுவலர் பணி இடங்களை, பொதுப்பணி நிலையாக அறிவித்து, பாகுபாடின்றி துறை பணியிடை மாற்றப்பதவியாக உத்தரவு வழங்க வேண்டும்.
வயது முதிர்வின் காரணமாக, பணி ஓய்வு பெறும்போது, தணிக்கை தடையில்லா சான்று பெற அலுவலர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவற்றை தவிர்க்க, தணிக்கை தடை தொர்பாக, 20 ஆண்டுகள் தடையில்லா சான்று பெற உத்தரவிட்டததை, 10 ஆண்டுகளாக குறைத்து திருத்திய உத்தரவு வழங்க வேண்டும்.
வேளாண் நிதிநிலை அறிக்கைபடி, 4,572 வேளாண் உழவர் நலத்துறை தொழில் நுட்ப களப்பணி அலுவலர்களை, வேளாண் விரிவாக்க அலுவலர் என்ற பொதுப்பணி பெயரில், தனிப்பணி விதிகளை உருவாக்கி முறையாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : நாமக்கல்லில் சின்ன வெங்காயம் சாகுபடி குறித்த இலவச பயிற்சி
- நாமக்கல்