உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 : நாமக்கல் மாவட்டத்திற்கு குவியும் முதலீடுகள்..!
சென்னையில் நேற்று துவங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024-ல் நாமக்கல் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில்
ரூ.1,693.86 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக
மாவட்ட ஆட்சியர் உமா, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை தொழில் மிகை முன்னோடி மாநிலமாக மாற்றும் பொருட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், ஜனவரி 2024 ஆம் மாதம் 07 மற்றும்
08 ஆகிய தேதிகளில் ”உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” (GIM) சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தொழில்துறையின் அனைத்து தரப்பினர் மற்றும் மாணவர்களை பங்கு பெற செய்வது அரசின் நோக்கமாகும். இந்த உலக முதவீட்டாளர்கள் மாநாட்டின் துவக்க விழா நிகழ்வானது சென்னையில் 07.01.2024 நேற்று காலை 9.30 மணி முதல் 11.45 மணி வரை நடைபெற்றது.
அனைவரும் உள்ளடக்கிய நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதில் ”உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” முக்கிய பங்கு வகிக்கும்.
காணொளி காட்சி வாயிலாக ஒளிபரப்பு :
அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமையில் நேற்று (07.01.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 நிகழ்ச்சி காணொலிகாட்சி மூலம் ஒளிப்பரப்பப்பட்டது. இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழில்துறை கூட்டமைப்புகள், தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிட்கோ மற்றும் தொழில் முனைவோர்கள், தொழில் முதலீட்டாளர்கள் என பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் கூறுகையில், தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் கவிஞர் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள், டிரினிட்டி மகளிர் கல்லூரி, டிரினிட்டி சி.பி.எஸ்.சி பள்ளி, குறிஞ்சி கல்வி நிறுவனங்கள் மற்றும் பேளூக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட உயர்கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் துவக்க விழா நிகழ்வானது காணொளி காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ரூ.1,693.86 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் :
”உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கு நாமக்கல் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டிற்கான இலக்காக ரூ.1,638 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த இலக்கை தாண்டி நேற்று மட்டும் ரூ.1,693.86 கோடிக்கான 325 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் சுமார் 8,832 வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இம்முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை அனைத்து துறைகளிடமிருந்து விரைவாக உரிய காலத்தில் பெற்றிட ஒற்றை சாளர தகவு வழியாக பெற்றுத்தர மாவட்ட தொழில் மையம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
செயற்கை நுண்ணறிவு துறையில் அரசு சிறப்பு கவனம் :
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வில் காட்சிப்படுத்துவதற்கும், அதன் மூலம் வாங்குபவர், விற்பனையாளர் மற்றும் பல்வேறு பங்குதாரர்களை இணைக்கும் தளமாக ”உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” அமையும். விண்வெளி தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள், ஜவுளி, தரவு பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட பொருட்ள் உள்பட பல்வேறு துறைகள் அரசிடமிருந்து சிறப்பு கவனம் மற்றும் ஆதரவைப் பெற்ற முதலீட்டு வாய்ப்புகளைப் பெற்றிட ”உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” முக்கிய தளமாக செயல்படும்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநாட்டை காணும் வகையில் ஏற்பாடுகள் :
மேலும் நேற்று (07.01.2024) மற்றும் இன்று (08.01.2024) ஆகிய 2 நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் அனைத்து நிகழ்வுகளையும் பொதுமக்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய அனைவரும் காணும் வகையில், www.tngim.2024.com மற்றும் https://tngim2024.com/live-event-listing ஆகிய இணையதளங்கள் மூலம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் இன்று நடைபெறும் மாநாட்டின் இறுதியில் நாமக்கல் மாவட்டத்திற்கு மேலும் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வீ.சகுந்தலா, தொழில்துறை கூட்டமைப்புகள், சிட்கோ, தொழில் முனைவோர்கள், தொழில் முதலீட்டாளர்கள், தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க ; பொங்கல் பரிசு தொகுப்பு - நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
- நாமக்கல்