நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – எம்.எல்.ஏ ஈஸ்வரன் அறிவுறுத்தல்..!
திருச்செங்கோடு நகராட்சியில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அறிவுறுத்தினார்.
திருச்செங்கோடு நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில், அணிமூர் குப்பை கிடங்கு, தினசரி சந்தை கட்டுமானப் பணி காலதாமதம், வாரச்சந்தை பணி மெதுவாக நடப்பதற்கு என்ன காரணம்..?, ஒப்பந்ததாரர்களுக்கு பில் பாஸ் செய்வதில் காலதாமதம் ஏன் ஏற்படுகிறது, நகராட்சிகளில் உள்ள குளங்களை கோடிக்கணக்கில் செலவு செய்து புனரமைத்திருக்கிறோம் அதில் மீண்டும் ஆகாயத்தாமரை மூடி உள்ளது ஏன், தெரு நாய் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது தீர்வுக்கு நகராட்சி எடுத்த நடவடிக்கை என்ன என பல கேள்விகளை அடுக்கினார்.
இதே போல், 4-வது வார்டு திமுக உறுப்பினர் டிஎன் ரமேஷ் பேசுகையில்,4-வது வார்டு பகுதியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நாய்கள் அதிகளவில் உள்ளது. ஒரு சில இடங்களில் நாய்கள் மக்களை தாக்குவது அதிகரித்தும் வண்ணம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக தீர்வு கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதற்கு பதில் அளித்த நகராட்சி ஆணையாளர் சேகர், அணிமூர் குப்பை கிடங்கில் 35 ஆயிரத்து 381 கியூபிக் மீட்டர் குப்பைகள் இருப்பதாகவும் அதனை பிப்ரவரி மாதத்திற்கு முடித்து விடுவதாகவும் கூறியிருந்தனர். ஆனால் தற்போது வரை 17,400 க்கு மீட்டர் இன்னும் இருப்பு உள்ளது. தற்போது ஏப்ரல் மாதத்தில் முடித்துக் கொடுத்து விடுவதாக உறுதி அளித்திருக்கின்றனர்.விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என கூறினார். தெரு நாய்கள் பிரச்சனைக்கு நகராட்சியில் கடந்த அக்டோபர் மாதம் 969 நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து அந்தந்த பகுதிகளில் விட்டோம் ஆனாலும் தொடர்ந்து தெருநாய்கள் பிரச்சனை நிலவி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு குறித்து அரசிடம் கலந்து பேசி எடுக்க முடியும் என தெரிவித்தார்.
நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பேசுகையில், திருச்செங்கோடு நகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதை நாங்களும் உணர்கிறோம். பெரும்பாலான நகர்மன்ற உறுப்பினர்கள் இது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நேற்று ஒரு நாளில் மட்டும் திருச்செங்கோடு பகுதியில் 8 பேரை நாய்கள் கடித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அனைவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாய்களை பிடித்து கருத்தடை செய்து அதே பகுதியில் விட்டாலும் இதே நிலை நீடிக்கிறது. விரைவில் அரசிடம் உரிய தீர்வு பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க : நாமக்கல்லில் அரசு அதிகாரிகள் அதிரடி மாற்றம்..!
- திருச்செங்கோடு