சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : எம்.பி. துவக்கி வைப்பு
நாமக்கல்லில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை எம்.பி ராஜேஸ்குமார் துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாமக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார், ஆட்சியர் உமா, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த பேரணியில், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்போம், தலைகவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து சாலைகளில் பயணிப்போம், செல்போன் பேசி கொண்டு வாகனத்தில் பயணிக்க கூடாது, மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர். இந்த பேரணியானது நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பூங்கா சாலையில் நிறைவடைந்தது.
முன்னதாக எம்.பி ராஜேஸ்குமார், ஆட்சியர் உமா மற்றும் எம்எல்ஏ ராமலிங்கம் தலைமையில் சாலை பாதுகாப்பு உறுதி மொழியும் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் போக்குவரத்து ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, நித்யா, சரவணன், சக்திவேல் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நாமக்கல்