பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு வித்தியாசமான முறையில் யோசித்த தனியார் அறக்கட்டளை
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் உருவாக்கும் விதமாக திருச்செங்கோட்டில் இயங்கி வரும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக “அதிகப்படியான பிளாஸ்டிக் பொருட்களை ஒரு பாட்டிலில் அடைத்து தருபவர்களை பாராட்டி மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி” திருச்செங்கோட்டில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது.
அழிக்க முடியாத ஆனால் மனித குலத்துக்கு அழிவை உருவாக்கக்கூடிய ஒரு பொருளாக இருந்து வருகிற பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும், ஆங்காங்கே பொதுமக்கள் சுய விழிப்புணர்வு இல்லாமல் சாக்கடைகளிலும், தெருக்களிலும் பிளாஸ்டிக்கை கொட்டுவதால் மழைக்காலங்களில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்படுகிறது. அவ்வாறு சாக்கடைகளிலும் நீர் நிலைகளிலும் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் ஒட்டுமொத்தமாக கடலில் சென்று சேரும் நிலை வரும் போது பருவநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு அபாயங்கள் ஏற்படுகிறது. இதனை களைய பல்வேறு வகையான முயற்சிகளை மத்திய மாநில அரசுகளும் பல்வேறு தனியார் அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோட்டில் இயங்கி வரும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு குழந்தையும் தங்கள் கைகளில் கிடைக்கிற பிளாஸ்டிக் பொருட்களை தங்கள் வீட்டில் உள்ள பழைய தண்ணீர் பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் எவ்வளவு அதிகமாக கூடுதல் எடையுடன் அழுத்திக் கொடுக்கிறார்களோ அவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 250 கிராம் முதல் 500 கிராம் வரையிலான பிளாஸ்டிக் பொருட்களை தண்ணீர் பாட்டில்களில் அடைத்து கொடுத்த குழந்தைகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் உள்ள நம்ம திருச்சங்கோடு அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை தலைவர் மற்றும் பிஆர்டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறுவர் சிறுமிகளுக்கு பாராட்டி மரக்கன்றுகள் மற்றும் விதை பென்சில்களை பரிசுகளாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, “பிளாஸ்டிக் பொருள்களை அழிக்க பல்வேறு முயற்சிகள் செய்தாலும் அதனை தவிர்ப்பது, தடுப்பது, அழிப்பது ஆகிய மூன்று முறைகளில் மட்டும் தான் ஒழிக்க முடியும் என்பதால், திருச்செங்கோடு நகராட்சி பல்வேறு நிலைகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிர்வாகத்தினர் பள்ளி குழந்தைகள் மத்தியில் பிளாஸ்டிக் பொருள்களை சேகரித்து அதனை மாற்று வடிவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பிளாஸ்டிக் பாட்டில்களில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு வேலி அமைப்பது, செடிகளுக்கான கூண்டு அமைப்பது, வீட்டு பிராணிகள் வளர்ப்பு கூண்டு அமைப்பது, போன்ற பல்வேறு யுக்திகளை கடைபிடிக்க உத்தேசித்து உள்ளனர் . இதனை திருச்செங்கோடு நகராட்சி பாராட்டுவதோடு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்” என கூறினார். நிகழ்ச்சியில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : திருச்செங்கோட்டில் டெங்கு கொசுக்கள் ஒழிக்கும் பணி தீவிரம்
- திருச்செங்கோடு