நாமக்கல்லில் போலீஸ் உடற்தகுதி பயிற்சி வகுப்பு
போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், உடற்தகுதி பயிற்சி வகுப்பு, வரும் பிப்ரவரி 8ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் காவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, அடுத்தகட்டமாக நடக்கும் உடல் அளவீடு சோதனை மற்றும் உடல்திறன் சோதனை தேர்வில் வெற்றி பெற, உரிய வகையில், உடற்தகுதி பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தின் மூலம், ஆட்சியர் அலுவலக விளையாட்டு திடலில், உடற்தகுதி பயிற்சி வகுப்புகள், வரும், பிப்ரவரி 8ம் தேதி துவக்கப்படுகிறது.
தினமும், காலை, 6:30 முதல் 9:00 மணி வரையும், மாலை, 4:00 முதல் 6:00 மணி வரையும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நடந்த எழுத்து மற்றும் உடற்தகுதி இலவச பயிற்சி வகுப்பில் பயின்று, 2022-23 எஸ்.ஐ. தேர்வில், 5 பேரும், போலீஸ் தேர்வில், 17 பேரும் பணி நியமன உத்தரவு பெற்று தற்போது பணியில் உள்ளனர். மேலும், 2023-24ல், எஸ்.ஐ. எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்று, 12 பேர் நேர்காணலுக்கு சென்றுள்ளனர். தற்போது, போலீஸ் எழுத்து தேர்வில், இங்கு பயிற்சி பெற்ற 13 பேர் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, 04286- 222260 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நாமக்கல்லில் ரூ. 1.35 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை
- நாமக்கல்