திருச்செங்கோட்டில் களைகட்டிய நிலா பிள்ளையார் நிகழ்ச்சி
திருச்செங்கோடு பகுதிகளில் தைப்பூச நிலா பிள்ளையார் என்னும் விநோத நிகழ்ச்சியில் பெண்கள் கும்மியடித்து வழிபட்டனர்.
ஆண்டுதோறும் தை மாதம் முருகப்பெருமானின் பிறந்த நாள் என கருதப்படும் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் தைப்பூச திருவிழா கொண்டாடப் படுவது வழக்கம். இதனை ஒட்டி முழு முதற்கடவுளான விநாயகருக்கு நன்றி செலுத்தும் விதமாக தைப்பூசத்திற்கு 5 நாள், 3 நாள் முன்னதாக முழு நிலவு நாள் வரை பெண்கள் ஒன்றுகூடி சித்ரான்னங்கள் வைத்து பிள்ளையார் வைத்து கும்மியடிக்கும் “நிலா பிள்ளையார் வழிபாடு” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் தைப்பூசத்தை ஒட்டி நிலா பிள்ளையார் கும்மியடி நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு சீதாராம்பாளையம் பகுதியில் கஜசிர விநாயகர் நிலா பிள்ளையார் வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு
கும்மியடித்து கொண்டாடினார்கள்.
பின்னர் திருமஞ்சனத்தில் விநாயகர் உருவத்தை பிடித்தனர். அதன்பின்னர் பழம், தேங்காயுடன் சர்க்கரை பாகு கலந்து மாவிளக்கையும், ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களையும் விநாயகர் முன்பு வைத்து படைத்து வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- திருச்செங்கோடு