ஆஞ்சநேயருக்கு லட்சத்து எட்டு வடைமாலை செலுத்த கோரி தேங்காய் உடைத்து நூதன ஆர்ப்பாட்டம்
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1 லட்சத்து எட்டு வடைமாலை செலுத்த கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் உடைத்தும் மனு அளித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் ஆன 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு நாமக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம், இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெறும். அன்றைய தினம் 18 உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு வடைமாலை செலுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரம் செய்யப்படமாட்டாது என கூறப்படுகிறது. மேலும் வடமாலை அலங்காரத்திற்கு நன்கொடை வழங்க யாரும் முன்வராததால் இந்தாண்டு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரம் கிடையாது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில், இதனை கண்டித்து இன்று இந்து மக்கள் கட்சி சார்பில் “தேங்காய் உடைக்கும்” ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஊர்வலமாக வந்த இந்து மக்கள் கட்சியினர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலின் முன்புறம் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவில் கண்காணிப்பாளரிடம் அறநிலையத் துறை சார்பிலேயே ஆஞ்சநேயருக்கு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரம் செய்ய வலியுறுத்தி மனு அளித்தனர். இந்து மக்கள் கட்சியின் தேங்காய் உடைக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க :(04.01.24) நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம்
- நாமக்கல்