திருச்செங்கோட்டில் கருப்பு பட்டை அணிந்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிஜிட்டல் கிராப் சர்வே எடுப்பதற்கு அரசு ஆணையிட்டுள்ளது, ஆனால் அதற்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என குற்றஞ்சாட்டி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் டிஜிட்டல் கிராப் சர்வே எடுக்க வேண்டும் என அரசு சார்பில் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு உண்டான கருவிகள் எதுவும் இதுவரை முறையாக வழங்கப்படவில்லை எனவும், அந்தப் பணியை செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் வற்புறுத்துவதாகவும் இதுகுறித்து புகார் தெரிவித்தால் சங்கத்தை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தாலுகாவில் உள்ள 20 பெண் வி.ஏ.ஓக்கள் உள்ளிட்ட 72 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய கருவிகளை வழங்கிவிட்டு டிஜிட்டல் கிராப் சர்வே எடுக்க பணிக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாமல் மிரட்டுவதை கண்டிப்பதாகவும், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : திருச்செங்கோட்டில் அறிவுசார் மையம் : முதல்வர் துவக்கி வைத்தார்..
- திருச்செங்கோடு