நாமக்கல் மாவட்ட மக்களே உஷார்.. நூதன மோசடி
கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக, செல்போனில் நூதன மோசடியில் ஈடுபடும் மர்ம நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் செல்போன் நம்பர்களை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், தாங்கள் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறுகின்றனர். மேலும், தங்ககளுக்கு பார்சல் வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அதற்கு பொதுமக்கள் தாங்கள் பார்சல் ஏதும் ஆர்டர் செய்யவில்லை என்று கூறினால், உடனே பார்சலை கேன்சல் செய்வதற்கு அவர்களது போனுக்கு வரும் ஓடிபி நம்பரை சொல்லும் படியும் அல்லது தாங்கள் சொல்லும் யுஎஸ்எஸ்டி கோட் நம்பரை செல்போன் நம்பரில் இருந்து டயல் செய்யும்படியும் கூறுகின்றனர்.
அதை செய்த பிறகு கால் ஃபர்வேடிங் மூலம் சம்மந்தப்பட்டவர்களின் செல்போனை ஹேக் செய்து, அதில் உள்ள அழைப்புகளை சைபர் குற்றவாளிகள் தங்களது செல்போனுக்கு மாற்றியும் அதன் மூலம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் கணக்குகளை தங்களது செல்போனுக்கு மாற்றிக்கொண்டு, அதில் இருந்து பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பணம் கேட்டு மெசேஜ் அனுப்பி மோசடி செய்து ஏமாற்றி வருகின்றனர்.
இதில் வெளி மாநிலங்களை சேர்ந்த நபர்கள் கூரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாக, தமிழ் மொழியிலேயே பேசி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, அடிக்கடி ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்து வருபவர்களையும், கூரியர் மூலம் வியாபாரம் சம்மந்தமான பார்சல் அனுப்புவர்கள் மற்றும் பெறுபவர்களையும் குறிவைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் கூரியர் கூரியர் மூலம் பொருட்களை பெறும் போது, கூரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறினால் கவனமுடன் செயல்பட வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களிடம் ஓடிபி எண்ணை தெரிவிக்க கூடாது. யுஎஸ்எஸ்டி கோட் மற்றும் அவர்கள் சொல்லும் தொலைபேசி எண்ணை டயல் செய்யக் கூடாது. இது போன்ற மோசடியால் பாதிக்கப்பட்ட நபர்கள், Cyber CrimeHelp Line Number 1930 மற்றும் www.cybercrime.gov.in தொடர்பு கொண்டு காலதாமதம் செய்யாமல் உடனடியாக புகார் செய்ய வேண்டும்.
இவ்வாறு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படிங்க :(01.02.24) நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்
- நாமக்கல்