வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்-நாமக்கல் ஆட்சியரிடம் மனு
வணிகர்களுக்கு என தனி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும் , வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு மற்றும் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதியில் மருந்து கடை நடத்தி வந்த வினோத்குமார் என்பவரை கடந்த டிசம்பர் 29-ம் தேதி இரவு 10 மணியளவில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த வினோத்குமார் வணிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் சமூக சேவையை செய்து வந்தார்.
இந்நிலையில், வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், மருந்து வணிகர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் அரவிந்தன், மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளரும் மாநில அமைப்பு செயலாளருமான அன்பழகன் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், வணிகர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தும் மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவத்துறையில் மருத்துவசேவை புரிவோருக்கு உள்ள பாதுகாப்பு சட்டம் போல, வணிகர்கள் மீது தாக்குதல் நடத்துவோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடும் வகையில், வணிகர்களுக்கு என “தனி பாதுகாப்பு சட்டம்” இயற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில், வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் மருந்து வணிகர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : ஆஞ்சநேயருக்கு லட்சத்து எட்டு வடைமாலை செலுத்த கோரி தேங்காய் உடைத்து நூதன ஆர்ப்பாட்டம்
- நாமக்கல்