குமாரபாளையத்தில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய திமுக மேற்கு மாவட்ட செயலாளர்
குமாரபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியை திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் துவக்கி வைத்து 216 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய, மதுரா செந்தில், தமிழக அரசு சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி பயில தேவையான பெரும்பாலான உதவிகளும் வழங்கி வருகிறது. அவற்றில் குறிப்பாக, மாணவர்கள் உயர் கல்வி பயிலவும் அவர்களின் தனித்திறமையை வெளி கொண்டு வரும் வகையில் “நான் முதல்வன்” திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் உயர் கல்வி குறித்த தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம், அதேபோல் மாணவர்கள் சிரமம் இன்றி பள்ளிக்கு வர இலவச மிதிவண்டி திட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு, தமிழக அரசு மாணவர்களின் நலனை காக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகிறது.
எனவே மாணவர்கள் சிறப்பான முறையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண் எடுத்தால் தான் தாங்கள் பயின்ற பள்ளிக்கு பெருமை சேரும், பெற்றோர்களை மதித்து வாழ்வில் உயர வேண்டும், மாணவர்கள் கட்டாயம் ஒழுக்கத்தையும் பின்பற்றினால் வாழ்வில் உயர்ந்த நிலையில் அடையலாம் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில், குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் விஜயகண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள், என்.சி.சி.அலுவலர் அந்தோணி சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்பின் நாராயண நகர் பகுதியில் 24.96 லட்சம் மதிப்பில் பொது சுகாதார கழிப்பிடம் கட்டிட பூமி பூஜை நடைபெற்றது. இதில் தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர்.
இதையும் படிங்க ; திருச்செங்கோட்டில் அறிவுசார் மையம் : முதல்வர் துவக்கி வைத்தார்
- குமாரபாளையம்