நாமக்கல்லில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடைபெறும்.
இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (19.01.2024) ராசிபுரம் அடுத்த காக்காவேரி முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.
கல்வித் தகுதி
இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர் , தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்றபணிகளுக்கு தேர்வுசெய்யவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர், 12-ம் வகுப்பு, பட்டயப்படிப்பு(Diploma), பட்டப்படிப்பு(Degree), ஐ.டி.ஐ (தொழிற்பழகுநர்) பயிற்சி மற்றும் கணினியியல் (Java, Tally) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இம்முகாமானது முற்றிலும் இலவசமானது. மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம்
மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை (19.01.2024) காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (காக்காவேரி) ராசிபுரத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க ; சேந்தமங்கலத்தில் நாளை மறுநாள் மின்தடை
- இராசிபுரம்
- நாமக்கல்