ராசிபுரம் அருகே நிலத்தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்
ராசிபுரம் அருகே நிலத்தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டதில் மாமனார் வெள்ளையன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அருகே கெடமலை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளையன்(60). இவரின் அண்ணன் மகளான குப்பாயி என்பவரை, சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜனை என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். மாமனார் வெள்ளையன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது 4 சென்ட் நிலத்தை வேறு ஒருவருக்கு பத்திரத்தை அடமானமாக வைத்து, 20 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார்.
அதனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு செளந்தர்ராஜன் மீட்டு அந்த பத்திரத்தை மீட்டு தனது வீட்டில் வைத்துக் கொண்டார். இதனால், தனக்கு தெரியாமல் தனது மருமகன் செளந்தரராஜன் நிலத்தின் பத்திரத்தை மீட்டு வைத்து கொண்டதால் ஆத்திரமடைந்த வெள்ளையன் தனது மருமகனுடன் செளந்தரராஜனுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அடிவாரப்பகுதியில் உள்ள தனது அரளித் தோட்டத்தில் வெள்ளையன் வேலை செய்து கொண்டிருந்த போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செளந்தர்ராஜன் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வெள்ளையனை சுட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதில் வெள்ளையனின் இடது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த நாமகிரிப்பேட்டை போலீசார் வெள்ளையனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த சௌந்தர்ராஜனை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : நாமக்கல்லில் சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக புகார்.
- இராசிபுரம்