திருச்செங்கோட்டில் 30 வருட கால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு : எம்.எல்.ஏ ஈஸ்வரன் சொன்ன ஹேப்பி நியூஸ்..
திருச்செங்கோடு அடுத்துள்ள திருநகர் காலனி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த கழிவுநீர் தேங்கும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கால்வாய் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக எம்.எல்.ஏ ஈஸ்வரன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநகர் காலனி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 750 வீடுகள் உள்ளது. இங்கு கடந்த 30 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த கழிவுநீர் தேங்கும் பிரச்சனையை, தீர்க்கும் வகையில், கால்வாய் அமைக்கும் பணிக்கு “நமக்கு நாமே” திட்டத்தில் 36 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் இன்று (02.01.2024) நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு நவீன இயந்திரங்களை வழங்கிய பி.ஆர்.டி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் உடன் இருந்தார்.
திருச்செங்கோடு எம்.எல்.ஏ ஈஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பு :
பணிகள் ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ ஈஸ்வரன், 30 ஆண்டுகளாக பல குடும்பங்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்து வந்த நிலையில், கடினமான பணி என தெரிந்தும், இந்த பணியை தொடங்கி செய்து வருகிறோம். தொடங்கிய பின் தான், அங்கு பாறைகள் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பி.ஆர்.டி. நிறுவனத்தின் நவீன இயந்திரங்கள் உதவியுடன் இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவை ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் முடிவடைந்து விடும். 30 ஆண்டுகள் தீராமல் இருந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வரும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திருச்செங்கோடு நகர் முழுவதும் 350க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட “வளரும் திருச்செங்கோடு” என்ற அமைப்பின் கீழ், நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் தொடங்கப்பட்டது. ஆங்காங்கே சாலைகள் அமைக்கும் பணி நடந்ததால் சிசிடிவி கேமரா நிறுவுவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. நிறுவிய இடங்களில் சில குறைபாடுகள் இருப்பதாக புகார் வந்ததன் பேரில் அதனை ஆய்வு செய்து மீண்டும் பணிகளை சீரமைக்க உத்தரவிட்டிருக்கிறோம். அதன்படி சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன், முழுமையாக சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டிற்கு வரும் அனைத்து குறைகளையும் நீக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.
பி.ஆர்.டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பரந்தாமன் செய்தியாளர்கள் சந்திப்பு :
இந்த பணிகள் குறித்து பி.ஆர்.டி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் கூறுகையில், திருநகர் காலனியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு அங்கு 16 அடிக்கு மேடு இருந்ததால் பணிகளை செய்வதில் சிரமம் இருந்தது. பலமுறை பல்வேறு முயற்சிகள் செய்தும் நிறைவேறாமல் இருந்த பணியை சட்டமன்ற உறுப்பினர் முயற்சியால் சவாலான பணி என தெரிந்தும் எடுத்து செய்து வருகிறோம். 16 அடி ஆழத்தில் 5 அடி விட்டம் கொண்ட சிமெண்ட் குழாய்கள் பதிக்கும் பணி என்பது சாதாரண பணியல்ல, கட்டிடங்கள் நிறைந்த பகுதி என்பதால் வெடி வைத்து தகர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுரங்கங்கள் அமைக்கும் பணிக்கு பயன்படும் இயந்திரங்கள் கொண்டு பணிகளை செய்து வருவதாகவும் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி இருந்தாலும் சொந்த ஊருக்கான வளர்ச்சி திட்ட பணிகள் என்பதால் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க ; திருச்செங்கோட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு நூதன முறையில் யோசித்த தனியார் அறக்கட்டளை
- திருச்செங்கோடு