150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாமக்கல் காவல் நிலையத்திற்கு விருது..!
சென்னையில் நடைபெற்ற 75-ஆவது குடியரசு தின விழாவில், 2023-ஆம் ஆண்டுக்கான ஆய்வில், தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையமாக மாநில அளவில் நாமக்கல் நகர காவல் நிலையம் இரண்டாமிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கான விருதை நாமக்கல் நகர காவல் நிலைய ஆய்வாளர் சங்கரபாண்டியனிடம் வழங்கிப் பாராட்டினார். இந்த விருதைப் பெற்ற காவல் ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குற்ற வழக்குகள் தேக்கமின்மை, ஆவணங்களை முறையாகப் பராமரித்தல், புகாருக்கு உள்ளாகாதது போன்றவற்றின் அடிப்படையில் நாமக்கல் காவல் நிலையம் விருதுக்குத் தேர்வாகியதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
150 ஆண்டுகளாக கம்பீரமாக காட்சி அளிக்கும் நாமக்கல் காவல்நிலையம் :
நாமக்கல் நகர காவல்நிலையமானது 1873-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் துறையூர் – திருச்சி சாலை சந்திப்பில் துவங்கப்பட்டது. அப்போது நாமக்கல் மாவட்டத்திற்கே இந்த ஒரு காவல்நிலையம் தான் செயல்பட்டதாக கூறப்படுகிறது . ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புகார் அளிக்க வேண்டும் என்றால் நாமக்கல் மட்டுமே வர வேண்டும். அதன்பின் சுதந்திரம் பெற்ற பின்னரும் நாமக்கல் காவல் நிலையம் தொடர்ந்து அதே கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில், மற்ற பகுதிகளில் படிப்படியாக காவல் நிலையங்கள் அமைக்க பட்டது. இதனையடுத்து 2010-ம் ஆண்டு ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடத்தின் அருகிலேயே புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு அங்கு நகர காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 150 ஆண்டு காலமாக கம்பீரமாக நாமக்கல் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது, ஒரு காவல் ஆய்வாளர், 4 உதவி காவல் ஆய்வாளர்கள், 60 காவலர்கள் என மொத்தம் 65 பேர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அரசு கால்நடை மருத்துவ கல்லூரிக்கு விரைவில் புதிய மகளிர் விடுதி – எம்பி தகவல்
- நாமக்கல்