பைக் மோதிய விபத்தில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் உயிரிழப்பு
நாமக்கல் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட விசேஷத்தை முன்னிட்டு பல பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி மலைக்கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பல குழுக்களாக பாதயாத்திரை பயணமாக நடந்து செல்வர். பகல் முழுவதும் நடந்து விட்டு இரவில் கிடைக்கும் இடங்களில் ஒய்வு எடுத்து விட்டு மறுநாள் பாதயாத்திரையை துவக்குவது வழக்கம்.
நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி அடுத்த மேற்குபாலப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் தங்கராசு (59). அவர், அதே பகுதியை சேர்ந்த சசிகலா, மலர்கொடி ஆகியோருடன், பழனி செல்வதற்காக பாதயாத்திரை குழுவினருடன் புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை, 5 மணிக்கு, நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்று தங்கராசு மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தங்கராசுவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி, இன்று காலை 8 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக, பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனிக்கு பாதயாத்திரை சென்றவர், சாலை விபத்தில் பலியான சம்பவம், அவரது கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : திருச்செங்கோட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு நூதன யோசனையில் இறங்கிய தனியார் அறக்கட்டளை
- பரமத்தி வேலூர்