காந்தமலை முருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழா – எம்.எல்.ஏ பங்கேற்பு
மோகனூரில் அமைந்துள்ள காந்தமலை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ ராமலிங்கம் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு உள்ள முருகப்பெருமான் பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்றவாரு அருள்புரிந்து வருகிறார். நாள்தோறும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று (25.01.2024) தைப்பூச தினத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு அதிகாலை நடை திறக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் மோகனூரில் உள்ள காவேரி ஆற்றில் நீராடி மயில் காவடி, இளநீர் காவடி, பால்குடம், தீர்த்த குடம் ஆகியவற்றை சுமந்து கொண்டு ஆற்றங்கரையில் இருந்து மேலதளங்கள் முழங்க நடனமாடினார். அவர்கள் பல்வேறு வீதிகள் வழியாக பயணம் செய்து இறுதியாக கோவிலை வந்தடைந்தனர்.
அதன்பின், மூலவர் காந்தமலை முருகனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தம், பால்,இளநீர், தயிர், திருமஞ்சனம், திருநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிருதம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் முருகன் சிறப்பு அலங்காரமாக தங்க கவச ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு திருக்காட்சி தந்தார். பின் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் திருத்தேர் பவனி வைபவம் நடைபெற்றது. தேரை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மோகனூர் திமுக ஒன்றிய செயலாளர் நவலடி உள்ளிட்டோர் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பின்னர் திருத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர் நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க : நாமக்கல்லில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!
- நாமக்கல்