பரமத்தி வேலூரில் வெல்லத்தில் கலப்படம் : 12 டன் சர்க்கரை பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளான கபிலர்மலை, ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், சாணார்பாளையம், கள்ளிப்பாளையம், பொன்மலர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வெல்ல ஆலை கொட்டகைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை கொட்டகைகளில் கரும்பிலிருந்து சாறு பிழிந்து குண்டு வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால் வெல்லம் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபகாலமாக குண்டு வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரிப்பதற்கு குறைந்த அளவு கரும்பு பாலுடன் வெள்ளை சக்கரை (அஸ்கா சர்க்கரை) சேர்த்து வெல்லம் நாட்டு சர்க்கரை தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, 16 ஆலை கொட்டகைகளில் ஆய்வு செய்ததில் அதில், 6 ஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை தயாரிப்பில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 12 டன் வெள்ளை (அஸ்கா) சக்கரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அஸ்கா சர்க்கரை, வேதிப்பொருட்கள், வேதி நிரமிகள் அதிக அளவு கலந்து தயாரிக்கப்பட்ட வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் அருண் கூறுகையில், ஆலை கொட்டகைகளில் தயாரிக்கப்பட்ட வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை மாதிரிகள் எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆலை கொட்டகைகளில் கரும்பு சாரில் இருந்து பாகு காய்ச்சுவதற்கு கலப்பட பொருட்கள் மற்றும் வேதி பொருட்கள் பயன்படுத்தும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், ஆலை கொட்டகைகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் கலப்படத்தில் ஈடுபடும் ஆலைக்கொட்டகைகளுக்கு சீல் வைக்கப்படுவதுடன் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
“தமிழ்நாடு அளவில் உணவு தொடர்பான புகார்கள் எதுவானாலும், 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்”. வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்க இந்த எண்ணை 94440 42322 பயன்படுத்தலாம்..
இதையும் படிங்க : முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்..!
- பரமத்தி வேலூர்