நாமக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்இதுவரை 2,490 மனுக்கள் பதிவு.எம்.பி. தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் இதுவரை 2,490 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (23.12.2023) நாமக்கல் நகராட்சி வார்டு எண்: 25, 26, 33, 34, 35, 36, 38, 39 உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற்றது. இதனை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் திட்ட முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 18.12.2023 அன்று கோயம்புத்தூரில் “மக்களுடன் முதல்வர்” என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் நோக்கம் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் சார்பாக நிறைவேற்றப்படுகின்ற சேவைகள், திட்டங்கள், பயன்கள் அவர்களுக்கு போய் சேர வேண்டும் என்கின்ற அந்த கருத்தின் அடிப்படையில், அரசே பொது மக்களை தேடிச் சென்று அவர்களுடைய மனுக்களை குறைகளை பெற்று தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த அடிப்படையில் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகமானது நாமக்கல் மாவட்டத்தில் 39 இடங்களில் நடத்தப்படும் என திட்டமிடப்பட்டு இதுவரை 20 முகாம்கள் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதில் நாமக்கல் நகராட்சி, இராசிபுரம் நகராட்சி, திருச்செங்கோடு நகராட்சி, பள்ளிபாளையம் கொமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகளில் அங்கு இருக்கின்ற மக்கள் தொகை அடிப்படையில், வார்டு அடிப்படையில் பல்வேறு கட்டங்களாக மக்களுடன் முதல்வருக்கான சிறப்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை நடந்த முகாம்களில் 2,490 பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு அது முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,427 மனுக்கள் நகராட்சி அளவிலும் பேரூராட்சி பகுதியில் 1063 மனுக்களும் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இம்மக்களுடன் முதல்வர் என்ற இந்த திட்டத்தின் உடைய சிறப்பு நோக்கமே இந்த மனுக்கள் பெற்று 30 நாட்களுக்குள் அவர்களுக்கு தீர்வு காணப்பட்டு அரசாங்கத்தின் மூலமாக வழங்கப்படுகின்ற அந்த சேவைகள் திட்டங்களின் ஆணைகள் உரிய முறையில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இம்முகாமில் நாமக்கல் நகர்மன்றதலைவர் கலாநிதி, துணை தலைவர் செ.பூபதி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சரவணன், நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் வட்டாட்சியர் நாமக்கல் சக்திவேல், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த முட்டை விலை
- நாமக்கல்