நாமக்கல்லில் வரும் 11 -ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா, 1,00,008 வடை தயாரிக்கும் பணி தீவிரம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருகின்ற 11-ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டப்படுவதையொட்டி ஒரு லட்சத்து எட்டு வடைமாலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மார்கழி திங்கள் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். அந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அன்றைய தினம் 1,00,008 வடை மாலை சாத்தப்பட உள்ளது. அதன்படி இந்த ஆண்டு, வருகிற 11-ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி அன்றைய தினம் அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளளார்.
பின்னர் ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்கு காலை 11 மணிக்கு பால் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடை பெற உள்ளது. மதியம் 1 மணிக்கு ஜொலி ஜொலிக்கும் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
இதுகுறித்து வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரமேஷ் கூறுகையில், ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 35 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். 2050 கிலோ உளுந்த மாவு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 120 கிலோ உப்பு ஆகியவற்றை கொண்டு வடை தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய இந்த பணி வரும் நாளை (10.01.24) மாலை நிறைவடையும் 11-ம் தேதி அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலை வடை மாலை சாத்தப்படும், பின்னர், ஆஞ்சநேயருக்கு மாலையாக சாத்தப்பட்ட 1,00,008 வடைகள் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட உள்ளது.என்றார்.
பொதுவாக ஆஞ்சநேயருக்கு பிடித்தமான பண்டம் வடை, அத்தகைய வடை உளுந்தம் மாவு மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. உளுந்து ராகு பகவானுக்கு உகந்தது. அதேபோல் நல்லெண்ணெய் சனிபகவானுக்கு உகந்தது. இரண்டையும் சேர்த்து ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்தால் ராகு மற்றும் சனிபகவானின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். அதனால் ஒவ்வொரு ஆண்டும் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : ஜொலி ஜொலிக்கும் தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சேநேயர், முனீஸ்வரர்
- நாமக்கல்