நாமக்கல்லில் நில அதிர்வு..?
நாமக்கல், மோகனூர் பகுதியில், வானத்தில் பயங்கர சத்தம் கேட்டதால், நில அதிர்வு என கருதிய பொதுமக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் நகரில், இன்று பகல், 1.35 மணிக்கு, வானத்தில் சுமார் 3 வினாடிக்கு, பயங்கர வெடி சத்தம் கேட்டது. இந்த சப்தம், நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூர், பரமத்தி வேலூர், புதுச்சத்திரம், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேட்டது. ஒரு சில இடங்களில், சத்தம் வெளிப்பட்டபோது, நில அதிர்வுபோல் உணரப்பட்டது. அதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், நில அதிர்வு ஏற்பட்டதாக பயந்து, வீடுகளில் இருந்து வெளியேறினர்.
“சூப்பர் சோனிக்” என அழைக்கப்படும் போர் விமானம், வானில் சென்றதால் பலத்த சத்தம் ஏற்பட்டுள்ளதே, இந்த சத்தத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சூப்பர் சோனிக் ஜெட் விமானம், காற்றின் ஒலியைவிட வேகமாக செல்லக்கூடியது. அவ்வாறு செல்லும்போது, பயங்கர சத்தம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சத்தம் தொடர்பாக, வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல், கடந்த 2021ம் ஆண்டு, ஜனவரி 6, டிசம்பர் 14, 2023ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி ஆகிய நாட்களில், இது போன்ற சத்தம் உணரப்பட்டது. அந்த மூன்று முறையும், கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சூப்பர் சோனிக் வகையிலான விமானம் சென்றதால், இதுபோன்று சத்தத்துடன் கூடிய அதிர்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், இந்த முறையும் சூப்பர் சோனிக் விமானம் சென்றிருக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து, பேரிடர் மேலாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க ; விவசாயிகளுடன் மாட்டு பொங்கலை கொண்டாடிய ஆட்சியர்
- நாமக்கல்