ராசிபுரம் அருகே சாக்கடையில் வீசப்பட்ட ஆண் சிசு
ராசிபுரம் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு உயிரிழந்த நிலையில், சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் லட்சுமி தெரு பகுதியில் இன்று காலை தூய்மை பணிகளுக்காக தூய்மை பணியாளர்கள் வழக்கம் போல் சாக்கடையில் தூய்மை பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது சாக்கடையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு தொப்புள் கொடியுடன் கைகால்கள் அசைவின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, சம்பவம் குறித்து ராசிபுரம் காவல்துறைக்கும் அரசு மருத்துவமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த ராசிபுரம் போலீசார் சிசுவை சாக்கடையில் இருந்து மீட்டனர். பின்னர் சிசுவின் உடலை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வயிற்றில் 5 மாதங்கள் வரை சிசு இருந்த நிலையில், அதனை கலைக்க முயன்றிருக்கலாம், இதனால் சிசுவை சாக்கடையில் வீசி சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
இருப்பினும், ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க ; எம்.பி ராஜேஸ்குமாரின் முகநூல் பக்கம் முடக்கம்
- இராசிபுரம்