சேந்தமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
சேந்தமங்கலம் நடந்த சாலை விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள பச்சுடையாம்பட்டி புதூரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி டேவிட். இவரும் அதே பகுதியை சேர்ந்த 12 வகுப்பு மாணவர் சரவணன் என்பவருடன் நேற்று இரவு புதன்சந்தையில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
எதிரில், பச்சுடையாம்பட்டியை சேர்ந்த பூவரசன், மோகன்குமார், பள்ளி மாணவர் கெளதம் ஆகிய மூவரும் சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை நோக்கி ஒரே இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது டேவிட் சாலையூர் என்ற இடத்தில் கார் ஒன்றை முந்த முயன்ற போது எதிரே வந்த பூவரசனின் இருச்சக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு இருச்சக்கர வாகனங்களில் பயணம் செய்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டதில் டேவிட் மற்றும் பள்ளி மாணவர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்ற மூவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மற்றொரு பள்ளி மாணவர் கெளதம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சேந்தமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க ; நாமக்கல்லில் நில அதிர்வு..?
- சேந்தமங்கலம்