ஜொலி ஜொலிக்கும் தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சேநேயர், முனீஸ்வரர்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் கோட்டை முனீஸ்வரர் சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் ஆஞ்சநேயர் சுவாமி வழிபாடு செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதன்ஒருபகுதியாக, ஆங்கில புத்தாண்டை ஒட்டி நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், திரவியம் மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் 7 டன் பூக்கள் கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
இந்நிலையில், நண்பகல் 1 மணியளவில் 18 ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அலங்காரம் சாத்துப்படி நடைபெற்றது. மேலும் மகா தீபாராதனை நடைபெற்றது.இதனை நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்ட பக்தர்கள் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநில பக்தர்களும் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தனர். இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது
இதேபோல் நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள பழமையான “கோட்டை முனீஸ்வரர்” திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முனீஸ்வரருக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அசைவ அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : 7 டன் மலர்களை கொண்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி
- நாமக்கல்