எம்.பியை காணவில்லை என நாமக்கல்லில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
எம்.பியை காணவில்லை என நாமக்கல் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில், திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஏ.கே.பி.சின்ராஜ் வெற்றி பெற்று எம்.பியாக உள்ளார். இம்முறை நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், நாமக்கல் தொகுதி திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இச்சூழலில் நாமக்கல் நகரிலும், நாடாளுமன்ற தொகுதி முழுவதும் ”கண்டா வரச்சொல்லுங்க”, எங்க தொகுதி எம்.பியை எங்கேயும் காணவில்லை. நாமக்கல் மக்களவை தொகுதி மக்கள், எனும் பெயரில் போஸ்டர் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது. 2வது முறையாக நாமக்கல் தொகுதி கொமதேகவுக்கு ஒதுக்கிய நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த தற்போதைய எம்பியை காணவில்லை என குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அரசியல் கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் போஸ்டர் ஒட்டியது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல்