இறந்த மாட்டின் உரிமையாளருக்கு இழப்பீடு, அதிரடி காட்டிய நீதிமன்றம்
இறந்த மாட்டின் உரிமையாளருக்கு, ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த சின்னபள்ளம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் அருள், இவரது மனைவி சிவகாமி (45). அவர், பள்ளம்பாறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.
இவர் 3 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு, ஜூனில், ஒரு மாடு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது. தமது மாடுகளை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம், அரசுக்கு சொந்தமான பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சிவகாமி பிரிமியம் செலுத்தி இன்சூரன்ஸ் செய்திருந்தார். மாடு இறந்தது குறித்து சங்க செயலாளருக்கு தகவல் தெரிவித்து, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி முன்னிலையில், அரசு கால்நடை மருத்துவர் மாட்டிற்கு பிரேத பரிசோதணை செய்துள்ளார். தொடர்ந்து, இறந்து போன மாட்டிற்கு இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை ரூ. 40 ஆயிரம் வழங்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்தில், சிவகாமி விண்ணப்பித்துள்ளார்.
அரசு மானிய திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் வழங்குவதாகவும், ஒரு குடும்பத்தில் 5 கால்நடைகளுக்கு மேல் இந்த திட்டத்தில் காப்பீடு செய்ய முடியாது என்றும், சிவகாமி மூன்று மாடுகளுக்கும், சிவகாமியின் கணவர் நான்கு மாடுகளுக்கும், இன்சூரன்ஸ் செய்துள்ளதால், விதி மீறல் நடந்துள்ளதாக கூறி, இழப்பீட்டுத் தொகை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது.
அதையடுத்து, இன்சூரன்ஸ் இழப்பீடு கேட்டு, நாமக்கல் மாவட்ட நுகர்வோர்நீதிமன்றத்தில், சிவகாமி வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதில், இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும், பள்ளம்பாறை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அரசு மானிய இன்சூரன்ஸ் திட்டத்தில், ஒரு குடும்பத்தில் ஐந்து கால்நடைகளுக்கு மட்டுமே காப்பீடு செய்ய முடியும். ஆனால், இந்த விதியை மீறி பால் உற்பத்தியாளர்கள் சங்கம், சிவகாமி குடும்பத்தினரிடம் 7 மாடுகளுக்கு பிரீமியம் வசூலித்து இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு செலுத்தியுள்ளது. வழக்கில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை வழக்கு தாக்கல் செய்தவர் சேர்க்கவில்லை. நடந்த தவறுக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கமே முழு பொறுப்பு. இருந்தும், ஒரே கணக்கு எண்ணில் 7 கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் சான்றிதழ், சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.
அதனால், இன்சூரன்ஸ் நிறுவனம், வழக்கு தாக்கல் செய்தவருக்கு இறந்து போன மாட்டிற்கான இழப்பீட்டுத் தொகை, ரூ. 40 ஆயிரம் ரூபாய், 8 வாரங்களுக்குள் செலுத்திவிட்டு, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை வழக்கில் சேர்க்காததால், சேவை குறைபாட்டிற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நாமக்கல்லில் அரசு வேலை : இன்றே அப்ளை பண்ணுங்க..!
- நாமக்கல்