அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலை
நாமக்கல் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அருகே பொதுமக்கள் நேரலை வாயிலாக கண்டு ரசித்தனர்.
புகழ் பெற்ற அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை பொதுமக்கள் நேரலையில் பார்ப்பதற்கு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் இடங்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆலயங்களில் ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்நிலையில், காவல்துறையினர் பொது இடங்களில் உரிய அனுமதி இன்றி நேரலை செய்யக்கூடாது என கெடுபிடி காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேரலை செய்ய தடை விதிக்க கூடாது என நீதிமன்றம் இன்று நண்பகலில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நாமக்கல் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் பாஜக மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் நரேஷ் தலைமையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காண நேரலை வசதியுடன் கூடிய எல்.இ.டி திரை கொண்ட வாகனம் கொண்டு வரப்பட்டது. உரிய அனுமதியின்றி நேரலை செய்யக்கூடாது என நாமக்கல் போலீசார் கெடுபிடி காட்டினார். இதனையடுத்து பாஜக சார்பில் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் ஆஞ்சநேயர் கோவிலின் அருகே அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நேரலை செய்யப்பட்டது. இதனை சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எல்இடி திரை முன்பு அமர்ந்து நேரலை கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க : நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை எம்.பி துவக்கி வைப்பு
- நாமக்கல்