நாமக்கல் கவிஞருக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பில் வெண்கல சிலை
நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் மார்பளவு வெண்கல சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கட்ராமபிள்ளை மற்றும் அம்மணி அம்மாள் தம்பதியருக்கு கடந்த 1888-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி பிறந்தவர் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை. இவர் “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது… தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்கிற வீரநடைக்கு வித்திட்டவர். கடந்த 1932 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றார். பின்னர் 1971 ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு அரசின் அரசவை கவிஞராக 5 ஆண்டுகள் இருந்தார். கடந்த 1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24 ஆம் தேதி கவிஞர் ராமலிங்கம் பிள்ளை இயற்கை எய்தினார்.
கவிஞரின் இல்லம் நினைவு இல்லமாக ;
கவிஞரின் புகழையும், நினைவையும் போற்றும் வகையில் நாமக்கல்லில் உள்ள கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் இல்லம் கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையால் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும் அவர் எழுதிய நூல்கள் அரசுடமையாக்கப்பட்டது. கவிஞர் இல்லம் அரசின் பொது நூலகத்துறையின் சார்பில் கிளை நூலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் கவிஞரின் சிலை அமைக்க வேண்டும் என்பது கவிஞரின் குடும்பத்தினர் மற்றும் நாமக்கல் விடுதலை போராட்ட தியாகிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
மானிய கோரிக்கையில் அறிவிப்பு ;
இந்நிலையில் சட்டமன்றத்தில் கடந்த செய்தித்துறை மானிய கோரிக்கையின் போது 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் மார்பளவு வெண்கல சிலை நிறுவும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முழுவதும் தற்போது முடிவடைந்தது.
20 லட்சம் ரூபாய் மதிப்பில் வெண்கல சிலை ;
அதன் திறப்பு விழா நிகழ்ச்சி கவிஞர் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் மார்பளவு வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் உமா தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், நகர்மன்ற தலைவர் கலாநிதி மற்றும் கவிஞரின் மகன் வழி பேரன் பழனியப்பன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் சிலைக்கு மாநிலங்களை உறுப்பினர் ராஜேஷ்குமார், ஆட்சியர் உமா, சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
முதல்வருக்கு நன்றி ;
இதில் பேசிய, நாமக்கல் கவிஞரின் பேரன் பழனியப்பன், நாமக்கல் கவிஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும், இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த முறை நாமக்கல் வருகை தந்த போது, கோரிக்கை மனுவாக வழங்கியதாகவும் அதன்பின் பணிகள் வேகமாக நடைபெற்று தற்போது சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்திய முதல்வர் அவர்களுக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இதேபோல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் தனக்கு பரிசாக வழங்கப்பட்ட நூல்களை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவையின் நிர்வாகிகள், விடுதலை போராட்ட தியாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ; எம்.பி துவக்கி வைத்தார்
- நாமக்கல்