விரைவில் கண்டம் விட்டு கண்டம் பாய தயாராகும் நாமக்கல் முட்டை:
இலங்கை, ரஷ்யா, துபாய், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நாமக்கல் மண்டல புதிய தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (NECC) :
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100 கோழிப்பண்ணையாளர்கள் உள்ளது. இங்கு 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் சில்லறை விற்பனைக்காக தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினசரி நிர்ணயம் செய்து வருகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் தேர்தல்:
இந்நிலையில், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின், தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல் மண்டலம் மற்றும் அதற்குட்பட்ட புதன்சந்தை, பரமத்தி, ராசிபுரம், மோகனுார், நாமக்கல், பல்லடம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட ஏழு வட்டார குழுக்களுக்கான நிர்வாகிகள் தேர்தல், கடந்த 22.12.2023 அன்று வரை நடந்தது.
புதிய நிர்வாகிகள் தேர்வு:
இந்நிலையில் நாமக்கல் மண்டலத்திற்கான தேர்தல் நடந்தது. இதில் மண்டல தலைவராக ஒருமனதாக சிங்கராஜ் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக சண்முகம், பொருளாளராக சுந்தரராஜ், மண்டல நிர்வாக குழு உறுப்பினர்களாக சுப்ரமணி, துரைசாமி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பர்.
செய்தியாளர்கள் சந்திப்பு:
இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நாமக்கல் மண்டல புதிய தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது, கோழி தீவனத்துக்கான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாலும், வங்கி வட்டி விகிதம், மின் கட்டணம், ஆட்கள் சம்பளம், பராமரிப்பு செலவு உயர்ந்துள்ளதாலும், முட்டை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.
ஒரு முட்டையை ஆறு ரூபாய்க்கு விற்றால்தான், பண்ணைகளை லாபகரமாக நடத்த முடியும். இதற்காக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கும் விலைக்கு குறைவாக, தங்கள் முட்டைகளை விற்பனை செய்வதில்லை என்பதில், பண்ணையாளர்கள் உறுதியாக இருக்க வேண்டும். விரைவில் இலங்கை, ரஷ்யா, துபாய், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: ராசிபுரத்தில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் மராத்தான்
- நாமக்கல்