வைகுண்ட ஏகாதசி – நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு அபிசேகம் மற்றும் புதிய முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு தினசரி கட்டளைதாரர்கள் மூலம், காலையில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெறும்.
இந்நிலையில் இன்று (23.12.2023) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை 9 மணிக்கு 1,008 வடைமாலை சார்த்தப்பட்டு தீபாராதணை நடைபெற்றது. பின்னர், நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம், உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சுவாமிக்கு புதிய முத்தங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- நாமக்கல்