திருச்செங்கோட்டில் பெண்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நந்தவனத் தெரு பகுதியில் புதுமையான பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்து கொள்ளும் நவீன ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
தைப்பொங்கல் திருநாளை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீர இளைஞர்கள் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இது போல் நடந்து வந்த போதிலும் இதில் பெண்களும் குழந்தைகளோ கலந்து கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு பெண்களும் குழந்தைகளும் கலந்து கொள்ளும் வகையில் நவீன ஜல்லிக்கட்டு என்ற ஒரு போட்டியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நந்தவன தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர் மன்றத்தினர் உருவாக்கினர்.
இதில், ஒரு பெரிய வட்டம் போட்டு அந்த வட்டத்திற்குள் ஒரு பெண்ணின் அல்லது குழந்தையின் கண்களைக் கட்டி ஒரு காலில் கயிற்றின் ஒரு முனையையும் மற்றொரு முனையை கோழியின் கால்களிலும் கட்டிவிடுவார்கள். விதிமுறைகளுக்கு உட்பட்டு கோழியை கைகளால் பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்து இந்த போட்டிகள் நடக்கும். கடந்த 17 ஆண்டுகளாக இந்த போட்டிகளை நடத்தி வரும் இளைஞர் மன்றத்தினர் இந்த ஆண்டும் நவீன ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினர்.
இதில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு கோழி பிடிக்கும் ஈடுபட்டனர். கோழியை தவறவிட்டவர்கள் வட்டத்துக்கு வெளியே வந்தவர்கள் கோழியை கைகளால் கடைசி வரை தடவிக் கொண்டே இருந்தவர்கள் என பலரும் பல்வேறு விதமாக விளையாடியது பார்வையாளராக வந்திருந்த மக்களை உற்சாகப்படுத்தியது.
இந்தப் போட்டி குறித்து கேரளாவின் பாலக்காடு பகுதியில் இருந்து பொங்கல் திருவிழாவுக்கு தனது சகோதரி வீட்டிற்கு வந்திருந்த சபீனா பானு என்ற பெண் கூறுகையில், நான் கேரளாவில் இருந்து வந்துள்ளேன் எனது சகோதரியை இங்கு திருமணம் செய்து கொடுத்திருப்பதால் இங்கு வந்தேன். வழக்கமாக பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டில் பெருமையாக பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. இது எப்படி இருக்கும் என்று காணுவதற்காக இந்த ஆண்டு இங்கு வந்திருந்தேன். பொங்கல் திருவிழா அனைவரும் ஒன்று கூடி ஜாதி மத பாகுபாடு இல்லாமல் சமத்துவமாக கொண்டாடுகிறார்கள்.
இதில், இந்த ஜல்லிக்கட்டு போட்டி குறித்து அதிகமாக கேள்விப்பட்டு உள்ளேன். இங்கு நவீன ஜல்லிக்கட்டு என்ற பெயரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ளும் போட்டி நடப்பதாக கேள்விப்பட்டு வந்து பார்த்தேன். பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்களில் துணியைக் கட்டி கால்களில் கயிற்றால் கோழியின் கால்களிலும் கட்டி கோழியை பிடிக்க வேண்டும் என்ற இந்த வினோத விளையாட்டு பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. இனி தொடர்ந்து ஆண்டாண்டும் தமிழகத்தின் பொங்கல் திருவிழாவை காண நான் இங்கு வருவேன் கூறினார்.
மேலும் போட்டி நடத்தப்படும் விதம் குறித்தும் பெருமைகள் குறித்தும் நந்தவனத் தெரு இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த தேவேந்திரன், தினேஷ் சங்கர் ஆகியோர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க ; முதல் முறையாக மாட்டு வண்டியில் பயணித்து vibe ஆன மழலையர்
- திருச்செங்கோடு