சாலப்பாளையம் ஜல்லிக்கட்டு போட்டி : முகூர்த்த கால் நடும் விழா
நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றியது வீரவிளையாட்டு. தை மாதம் நெருங்கிவிட்டால் காளைகளை தயார்படுத்த தொடங்கி விடுவார்கள். களத்தில் இறங்கி அந்த காளைகளை அடக்க காளையர்களும் தயாராவார்கள். 2017-ம் ஆண்டு போராட்டத்துக்கு பின்பு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விழாவுக்கு தனி மவுசுதான். கிராமம், நகரம் என மூலை முடுக்கெல்லாம் இருப்பவர்களும் ஜல்லிக்கட்டின் மீது அளவு கடந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக காளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஜல்லிக்கட்டு காளைகளின் மதிப்பு உயர்ந்து, பல லட்ச ரூபாய்க்கு கை மாறுகின்றன.
காளைகளை அடக்கும் வீரர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் பார்த்திராத நகரத்து இளைஞர்கள் கூட காளைகளை அடக்க பயிற்சி எடுத்து, அதற்கு தயாராகி வருகிறார்கள்.
அப்படிபட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள், நமது நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும், பொட்டிரெட்டிப்பட்டி, எருமப்பட்டி, அலங்காநத்தம், சேந்தமங்கலம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான காளைகள் மற்றும் மாடுப்பிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு டிசம்பர் மாதம் துவக்கத்திலேயே தயாராக துவங்கி விடுவார்கள். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாகவும் விழா கமிட்டியில் உள்ள சில குளறுபடி காரணமாகவும் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சொற்ப இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தங்களது பகுதிகளில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி இந்தாண்டும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேபோல் நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த காளை வளர்ப்போர் ஆட்சியரிடம் மனு அளித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கு இடத்தை தேர்வு செய்து முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாலப்பாளையம் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியை சேர்ந்த ராஜா இந்த பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடத்தப்பட்டு முகூர்த்த கால் நடப்பட்டது. இதில் நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், ஸ்ரீதேவி மோகன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் மயில் சுதந்திரம், சேந்தமங்கலம் அதிமுக ஒன்றிய செயலாளர் ஜி.பி.ரமேஷ், முத்துகாபட்டி தொழிலதிபர் அமெரிக்கா செல்வம், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மேலூர் குணா, லால்குடி சசி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற
தலைவர்கள்,காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : குமாரபாளையத்தில் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் தங்கமணி
- நாமக்கல்